கனடாவில் உள்ள பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில், பொலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தில், நான்கு மாதத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சீக்கிய தொழிலதிபர் சுட்டுக்கொலை
சீக்கிய தொழிலதிபர் ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னணியில் பிரபல தாதா
இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தொழிலதிபர் கொலை சம்பவங்களுக்கு, இந்தியாவில் பிறந்த, கனடா உட்பட பல நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல தாதா லோரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. அந்தக் கும்பலின் முக்கிய உறுப்பினரான கோல்டி தில்லான், சமூக ஊடகத்தில் காணொளி வெளியிட்டு இதை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக லோரன்ஸ் பிஷ்னோய் கும்பலை, கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
தற்போது தொடர் வன்முறையில் ஈடுபடுவதால், இந்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க, கனடா அரசு ஆயத்தமாகி வருகிறது.

