அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை அமெரிக்க இரகசிய சேவையினர் சுட்டுப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள அலுவலகம் அருகே, இண்டியானாவில் இருந்து ஆயுதங்களுடன் வந்த ஒருவர் சுற்றித்திரிவதாக உளவுத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் சிக்கிய ஆயுததாரி
இதனையடுத்து அந்த பகுதியில் உளவுத்துறையினர் சோதனை நடத்தினர்.இதன்போது வாகனத்தை நிறுத்திய ஒருவரின் அடையாளம், காவல்துறையினர் தெரிவித்த தகவலுடன் ஒத்துப்போனது. அந்த நபரிடம் ஆயுதங்களும் இருந்துள்ளன.
இது குறித்து விசாரணையின் போது, அந்த நபருக்கும், உளவுத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த நபரை உளவுத்துறையினர் சுட்டுப்பிடித்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் எங்கே…!
இச்சம்பவம் நடந்த போது,ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் விடுமுறையை கழிக்க புளோரிடாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ட்ரம்ப்பை கொல்ல முயற்சி நடந்தது. துப்பாக்கியால் சுட்டதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.