தான் இந்த அரசியலில் இருந்து வெளியேறினால் தமிழர்களை விட சிங்கள மக்களே அதிகளவில் கவலையடைவார்கள் எனவும் அந்தளவிற்கு தனது அரசியல் பணியை தான் நேர்த்தியாக மேற்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் இன்று (16.11.2025) வெளியான வாரஇறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை திருப்தியடையச் செய்வதைப் போல தெற்கிலுள்ள சிங்கள மக்களையும் தான் திருப்திப்படுத்தியுள்ளதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ வீரர்கள்
மேலும் குறித்த செவ்வியில், “இலங்கை இராணுவத்தினரை நான் இராணுவ வீரர்கள் என அடையாளப்படுத்துவேன். நான் இதனை எனது மனதிலிருந்து கூறுகிறேன்.

இராணுவத்தினரின் ஏராளமான சடலங்களை நான் பார்த்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களில் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.
இராணுவத்தினரை, இராணுவ வீரர்கள் என கூறுவதால் எனக்கு எந்தவித இலாபமும் இல்லை.
நாங்கள் போரிட்டிருந்தாலும், செம்மணி கதையில் உள்ளது போல சிங்கள இராணுவத்தினர் எங்களுடைய பெண்களை தகாத முறைக்கு உட்படுத்தியிருந்தாக தெரிவிக்கப்பட்டாலும் அவர்களில் 100 வீதமானவர்கள் இதுபோன்ற மோசமான செயல்களின் ஈடுபடவில்லை” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலற்ற புலம்பெயர்ந்த மக்களுடன் தான் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

