முல்லைத்தீவில் (Mullaitivu) தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள்
குடியமர்த்தப்படுவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் இன்று (25.04.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றின்
பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலான நிலப்பரப்பு
மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து
கொண்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான
நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றை சிங்கள
மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.

மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறக்குறைய 5 இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வனவளத் திணைக்களத்தினுடைய பொறுப்பில்
இருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த
நிலையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய
அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து ஆறு ஏக்கர் காணிகள் தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
மக்களுடைய பாவனையில் இருந்த காணிகள் 2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஒவ்வொரு திணைக்களங்களாக ஆட்சியாளர்கள் மக்களுடைய
பெரும்பாலான விவசாய காணிகளை அபகரித்து வைத்துள்ளார்கள்.
இங்கு விவசாய நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதற்கு முழுமுதல் காரணம் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களங்கள் அதனைவிட மகாவலி எல் வலயம் இவ்வாறாக
மக்களுடைய காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள்.
மக்களுடைய காணிகள்
மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்கு மக்கள் அல்ல.
அரசாங்கத்துக்கு மக்கள் என்ற நிலையில் அரசு இயங்கக்கூடாது.

மக்களுடைய காணிகளை
மக்களுக்கு விடுவித்து அந்த காணிகளின் ஊடாக மக்கள் தங்களுடைய விவசாய
நடவடிக்கையை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக கொண்டு நாட்டுக்கு
உதவக்கூடிய நிலையில் தான் மக்களை அரசாங்கம் பாவிக்க வேண்டும்.
தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக முழு
ஏக்கர் காணிகளையும் அபகரித்து கொண்டு சென்றால் மக்கள் எங்கே போவது? மஸ்தான் கூறிய கருத்தானது உண்மையை ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கின்றது.
இதேநேரம்
இன்னும் காணிகள் விடுவிப்பதாகவும் இருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டு
மக்களிடம் சேர்க்கப்பட்டால் நல்லது” எனவும் ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/sinhalese-settled-native-lands-tamils-1714037293

