கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபையில் இன்று (16) நடைபெற்ற மேயர் தெரிவு தேர்தல் நடவடிக்கைகள் அரச நிர்வாக அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு புறம்பான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் நாயகம் சாரங்கிகா ஜயசுந்தரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபை பதவிகள் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பல சட்ட ஆலோசகர்கள் பங்கேற்றிருந்தனர்.
வாக்கெடுப்பின் போது, வழிகாட்டுதல்களை பின்பற்றாமலே ரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனவும் சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சட்ட நடவடிக்கையில் எதிர்க்கட்சியில் உள்ள பிற கட்சிகளை உள்ளடக்கிக் கொள்ளும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

