செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன
ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப்
பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ச சிறைத்தண்டனை அனுபவித்து
வருகிறார்.
உயிர் ஆபத்துக்கள்
ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை
புதைக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.
அவரின் மனைவி, செம்மணியில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது
கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க
தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில்
பார்த்தேன்.
எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை
கூறப்போவதாக அவரது மனைவி கூறுகின்றார்.
ஆகவே, அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும். அவர் சிறையில் உள்ள
நிலையில், அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம். அப்படி நடந்தால், அதற்கு அரசாங்கமே
பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.