தென் கொரியாவில் (South korea) கடந்த மூன்று நாட்களாக பாரிய காட்டுத்தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தீ பரவல்
சியோலில் இருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான்சியோங் கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ தொடங்கியதகாவும் பின்னர் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தற்போதைய பேரிடர் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தீயணைப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கொரிய ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை சுமார் 3,286.11 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது, வடக்கு கியோங்சாங் மாகாணத்தின் உய்சோங் மற்றும் சான்சியோனில் முறையே ஆயிரம் ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது.
35,000 இலங்கையர்கள்
இன்று (23) நிலவரப்படி, நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நான்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகம் உறுதியளித்துள்ளதுடன், தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.