கிராமிய மக்களை
தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக்
கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார் நானாட்டான் பகுதியில் நேற்று(12.04.2025) இடம்பெற்ற பொதுமக்கள்
சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாடு ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி மக்களின்
எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம்.
வரலாற்றை மாற்றும் நாடாளுமன்றம்
இந்த நாட்டில் நிலவிய ஊழல்
அரசியலை ஒழிக்க இன, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஊழலுக்கு எதிராக
வாக்களித்தனர். இதன் விளைவாக, அநுரகுமார திஸாநாயக்க 2024இல் ஜனாதிபதியாகத்
தெரிவுசெய்யப்பட்டார்.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், வரலாற்றை மாற்றும்
ஒரு நாடாளுமன்றத்தை நாங்கள் உருவாக்கினோம். இன்று, அந்த நாடாளுமன்றத்தில்
நூற்று ஐம்பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கம் உள்ளது.
இன்று
நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு பெரிய குழு உள்ளது. அனைத்து இனங்கள்,
மதங்கள் மற்றும் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம்
இன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிக் கட்சி அரசாங்கத்தை அமைத்து அனைவரையும்
பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை. இந்த வெற்றிகள் அனைத்தும்
மக்களால் அடையப்பட்டன, வெற்றியாளர்கள் மக்களே” எனத் தெரிவித்துள்ளார்.




