இடம்பெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன்
எவ்விதத்தில் இத்தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாக தமிழரசுக்
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்றைய தினம் (2) மன்னாரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னாரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில்
குறித்த கூட்டம் இடம் பெற்றது.
உள்ளூராட்சி சபைகள்
கட்சியின் சகல அங்கத்தவர்களும் குறித்த கூட்டத்தில் பங்கு பற்றி இருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் போட்டியிட உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகள் குறித்து
ஆராய்ந்துள்ளதோடு, குறித்த சபைகளில் வேட்பாளர்களை நியமிப்பது குறித்தும்
குறிப்பாக வட்டார வேட்பாளர்கள், இரண்டாவது பட்டியல் வேட்பாளர்கள் நியமிப்பது
குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் நாட்டில்
இல்லாதவர்கள் மற்றும் வேறு கட்சியில் இணைந்தவர்கள் குறித்தும் முன்னெடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
தமிழ் தேசியக் கட்சி
எனினும், மிகவும் செல்வாக்கு உள்ளவர்களை வட்டார வேட்பாளராக நியமிப்பது என
ஏற்கனவே கட்சி எடுத்த தீர்மானத்துடன் மன்னார் மாவட்ட கிளையுடம் இனங்கி உள்ளனர்.
ஏனைய தமிழ் தேசியக் கட்சியுடனும் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும்
என்றும், தேர்தலின் பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும், ஆட்சி
நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில், தேர்தலுக்கு
முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை
மேற்கொண்டுள்ளோம்.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சபைகளுக்கும் ஏற்ற வகையில்
தீர்மானங்கள் எடுக்கப்படும், அத்தொடு அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.