மக்களை ஏமாற்றும் முகமாக, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முகமாக கதவடைப்பு போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில் அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழ் அரசுக்கட்சியினால் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் இலாபம்
“அண்மையில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எமது அரசாங்கமானது சட்டம் ஒழுங்கினைசரியாக நிலைநாட்டி வருகின்றது குறிப்பாக சட்டம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று.
இந்நிலையில் சில அரசியல் இலாபம் தேடுபவரால் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் போராட்டம் செய்வது என தேடவேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக சில அரசியல்வாதிகள் தெற்கில் ஒரு நிலைப்பாட்டினையும் வடக்கில் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ளார்கள்
மக்களை ஏமாற்றும் முகமாக மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முகமாக இவ்வாறான தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் ஏற்கனவே தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் .தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக போராட்ட அறிவிப்புகளை விடுத்து வர்த்தகர்களை பொதுமக்களை பொருளாதார ரீதியில் பாதிப்படைய செய்ய உள்ளார்கள்” என கூறியுள்ளார்.