ஐரோப்பிய ஒன்றிய
நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும்
தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய
ஒன்றியம் விலக்கிக் கொள்ளலாம் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
விசேட கண்காணிப்புக் குழுவுக்கு இடையில் நேற்று(4) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குத் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் விசேட
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டில் முடிவடைய இருக்கும் சூழலில், அதை
நீடிப்பதா என்பது குறித்து ஆராயவே ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.
வரிச் சலுகை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், இணையப் பாதுகாப்பு சட்டத்தை
சீராக்குதல், நல்லாட்சி முறையைப் பேணுதல், பொறுப்புக்கூறலை
நடைமுறைப்படுத்துதல், நியாயமான அதிகாரப் பகிர்வை முன்னெடுக்கும் விதத்திலான
அரசமைப்பை உருவாக்குதல் என்பவை தொடர்பாக இலங்கை சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய
உறுதிமொழிகளை நிறைவேற்றாதமை குறித்து இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர்
சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில், பொருளாதார ரீதியில் நாட்டை
மேம்படுத்தும் நோக்கில் நாட்டுக்கான வரிச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்க
வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம்.
அந்த வரிச்சலுகைகளை இலங்கை அரசுகள்
பெற்றுக்கொண்ட போதிலும், கடைசியில் நாட்டைப் பொருளாதார வங்குரோத்திலேயே கொண்டு
போய் நிறுத்தியுள்ளன. மறுபுறத்தில் இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கான
நிபந்தனைகளையும் அரசு நிறைவேற்றவில்லை.
தொடர்ந்து இவ்வாறு அரசு முறையற்ற
விதத்தில் – பொறுப்பற்றுச் செயற்படும்போது வரிச்சலுகையைத் தொடர்ந்து
வழங்குங்கள் என்று நாம் கோருவது நியாயமற்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது, பொறுப்புக்கூறலை
நடைமுறைப்படுத்துவது, அதிகாரங்களை நீதி, நியாயமான முறையில் பகிர்வது,
நல்லாட்சியைப் பேணுவது ஆகியவை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்
சர்வதேசத்துக்கும் தான் வழங்கிய உறுதிமொழிகளைத் தொடர்ந்து அரசு
நிறைவேற்றவில்லை. உதாசீனப்படுத்தி வருகின்றது.
இப்படி ஏமாற்றுகரமான முறையில் இலங்கை அரசு தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.
தமிழருக்கு நீதி
நீதியையும், நல்லாட்சியையும், மனித உரிமைகளையும் நிலைநாட்டும் தனது கடப்பாட்டை
இலங்கை நிறைவு செய்வதற்கான நிபந்தனைகளைக் காலம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம்
விதிக்க வேண்டும்.

அந்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறினால் வரிச்
சலுகையை விலக்கிக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்படியான
நடவடிக்கையை நாங்கள் வரவேற்போம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அதிகாரம் முறையான விதத்தில் பகிரப்பட
வேண்டும் என்பவை தொடர்பில் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

