இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, தமிழர்
தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த
தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு
சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை,
மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுவதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய தேசிய இனம் என்பதனை வெளிகாட்டி,
நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, 2009ஆம் ஆண்டு மிகப்பெரும்
இன அழிப்பொன்றின் ஊடாக அழித்த பேரினவாத அரசு, தமிழர் தேசத்தினை
ஆக்கிரமித்து நிற்கின்றது.
அரசியற்சூழல்
இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் ஊடாக தமிழர் தேசத்தில்
தனது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற பேரினவாத அரசு, ஈழத்தமிழர்களை தனது அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில்
அடிமைகளாக வைத்திருக்க முனைவதோடு, ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை
நீக்கம் செய்ய முனைகின்றது.
இச்சூழலில் ஈழத்தமிழர் தேசிய இனமாக, தேசமாக தமது திரட்சியினை உலகிற்கு சங்காய்
முழங்க வேண்டிய காலமாக இன்றிருக்கின்றது.
இலங்கைத் தீவினை மையப்படுத்திய இந்திய பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில்,
தமிழர் தேசத்தின் திரட்சியினை வெளிக்காட்டுவதன் வழியே, நம்மை சக்திமிக்க ஓர்
தரப்பாக வெளிக்காட்ட வேண்டிய அரசியற்சூழல் காணப்படுகின்றது.
தமிழர் தேசம்
இந்நிலையில், தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான
நிலைப்பாட்டினை, அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில்,
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஓர் கருவியாக கையாளும் ஓர் உத்தியாகவே,
தமிழர் தேசத்தினரால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளரை நாம்
கருதுகின்றோம்.
தமிழ்த் தேசிய பேரியக்கத்திற்கான தொடக்க புள்ளியாக தமிழ் பொதுக்கட்டமைப்பினால்
வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையானது, தமிழர்
தேசத்தின் அடிப்படைக் கோட்பாட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக
கருதுவதோடு, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய செயல்முனைப்புக்கான தொடக்க புள்ளியாக
எண்ணுகின்றோம்” என்றுள்ளது.