உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய பிரசாரப் போர் நேற்று நள்ளிரவுடன்
நிறைவுக்கு வந்தது.
நேற்று இறுதிக்கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் கட்சிகள்
பலவும் ஈடுபட்டன.
தேர்தலுக்கான மௌன காலத்தின்போது எவரேனும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை
விடுத்துள்ளது.
தேர்தல்
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபைகள் உட்பட 336 உள்ளூராட்சி
சபைகளுக்குரிய தேர்தல் நாளைமறுதினம் (6 ஆம் திகதி) நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த காலங்களில் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தமது ஆட்சிக்கு மக்கள் ஆணை உள்ளது எனவும், அது தொடர வேண்டும் என்பதே மக்களின்
நிலைப்பாடு என்பதையும் வெளிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும்
வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தீவிரம்
காட்டியது.
கட்சித் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதான பிரச்சாரக் கூட்டங்களில்
நேரில் களமிறங்கி வாக்கு வேட்டைக்குரிய பரப்புரைகளில் ஈடுபட்டார். குறிப்பாக
வடக்குக்கு தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் படையெடுத்து வந்திருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவைத் தக்க
வைத்துக்கொள்வதில் அநுர அரசு கூடுதல் அக்கறை செலுத்தியது.
வாக்குறுதி
அதேவேளை தற்போதைய அரசு பொய் கூறியே ஆட்சிக்கு வந்தது எனவும், வழங்கப்பட்ட
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் மையப்படுத்தி பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பிரசாரத்தை முன்னெடுத்தது.

தமது கட்சியால்தான் இந்த நாட்டை நிர்வகிக்க முடியும் எனவும், அடுத்த தேசிய
மட்டத்திலான தேர்தலுக்குரிய ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை ஐக்கிய மக்கள்
சக்தி கருதுகின்றது.
சஜித்தின் தலைமைத்துவத்தின் ஆயுளையும் இந்தத் தேர்தல்
முடிவுகளே நிர்ணயிக்கவுள்ளன.
அத்துடன், போர் வெற்றி, இராணுவம் உட்பட பழைய புராணங்களைப் பாடி, தேசியவாத
உணர்வைத் தூண்டி வாக்கு வேட்டை நடத்துவதற்குரிய பிரசாரத்திலேயே மொட்டுக்
கட்சி ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

