ட்ரம்ப்(Donald Trump) அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார்.
சர்வதேச பயணங்கள்
இந்நிலையில், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் அறிவித்து வருகிறார்.
அந்தவகையில், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அமெரிக்க பல்கலைக்கழங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.