வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப்
பிரதிநிதி மார்க் அன்ரூக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றையதினம்(11.02.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும்,
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைமைகள்
தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநருடன், ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
கலந்துரையாடினார்.
நன்றி தெரிவித்த ஆளுநர்
இதற்கு பதிலளித்த வடக்கு ஆளுநர், ஐ.நா.வின் பல்வேறு அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் உதவிகளுக்கு நன்றிகளைத்
தெரிவித்ததுடன், குறிப்பாக மீள்குடியமர்வின் போதான உதவிகளை மறக்க முடியாது எனக்
குறிப்பிட்டுள்ளார்.
அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைவதற்கு அந்த உதவிகள்
பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண
அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருடன், ஐ.நா.வின்
அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப்
பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.