ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும், ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் தென்மேற்கு நகரான தர்கோவைனில் கட்டுமானப் பணியில் இருந்த அணுமின் நிலையம் மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றின் மீது அமெரிக்கா, இரவு நேரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம் மீதும் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜோர்தான் வெளியிட்ட தகவல்
இதற்கிடையில், இன்று ஈரானால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை ஜோர்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன், நான்காவது ஏவுகணை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் விழுந்ததாக ஜோர்தான் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜோர்தானின் அகபா துறைமுகம் இலக்கு வைக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நியாயமற்ற மற்றும் அப்பட்டமான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ள ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு, நாட்டின் பாதுகாப்பு என்பது மீற முடியாத ஒரு சிவப்புக் கோடு என எச்சரித்து, அம்மானில் உள்ள ஈரானிய தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஆரம்பகட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே அது முறிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/us-iran-conflict-two-us-soldiers-killed-jordan-1784484408

