அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கும் டிராகன் படம் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வசந்தபாலன் தனது விமர்சனத்தை கூறி இருக்கிறார்.
வசந்த பாலன் பதிவு
இன்றைய சமூகத்தில் குற்றம் செய்வதை ஒரு சாரார் சாகசமாக, அறிவார்ந்தமாக,புத்திசாலித்தனமாக
வாழத்தெரிந்தவனாகப் பார்க்கிற காலமும் மனநிலையும் நிறைந்து வழிகிறது. குற்ற உணர்ச்சியை மொத்தமாக மூளையின் எந்தப் பகுதியிலும் சேமிப்பாகாத படி நூற்றாண்டு மறதிநோயாக மறந்து மாறிவிட்டது.
குற்றம் செய்கிற குற்றவாளிக்கு, குற்றத்தால் ஏற்படுகிற குற்ற உணர்ச்சியும், அந்த குற்ற உணர்ச்சியால் குற்றவாளி தனக்குத்தானே தந்துகொள்கிற தண்டனையும் பரிகாரமும் தான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை எந்நாளும் நிறுவிக்கொண்டே இருக்கிறது.
இந்த பூமர் கருத்தை இன்றைய gen Z இளைஞர்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு கதையை மணிமணியாக கோர்த்து இன்று பார்க்கும் இளைஞர்களின் ஒருவனாக கதாநாயகனை மாற்றி அவனோடு ரசிகர்களை கொண்டாட வைத்து கலங்க வைத்து குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சியை இயக்குனர் அஷ்வந்த் மாரிமுத்து செய்திருக்கிறார்.மனமார்ந்த வாழ்த்துகள் அஷ்வந்.
படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை ஒரு காட்சி கூட இது படத்திற்கு தேவையில்லாதக் காட்சி என்று சொல்லிவிட முடியாதபடி மிகவும் கவனமாக இந்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது
இந்த திரைக்கதைக்கான மிகவும் சிறப்பு என்னவென்றால் லட்சம் முறை சொல்லப்பட்ட கல்லூரி கதையில் இத்தனை சுவாரசியங்களையும் இத்தனை தருணங்களையும் உருவாக்கி காட்ட முடியும் என்பது தான்.படத்தின் கடைசி நொடி வரை ஆச்சர்யங்களை ஒளித்து வைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
பிரதீப் மிக எளிமையாக இந்த கதாபாத்திரத்தை பிரமாதமாக தன் தோள்களில் முதல் காட்சி துவங்கி இறுதிக்காட்சி வரை சுமந்து செல்லும்போது அவனுடன் சிரித்து அழ போதையில் குடிக்க காதலியை முத்தமிட குற்ற உணர்ச்சியில் தவிக்க என்று அழகாக பயணிக்க முடிகிறது.வாழ்த்துகள் பிரதீப்.
மிஷ்கினுக்கும் ஜார்ஜுக்கும் மிகப் பிரமாதமான கதாபாத்திரங்கள் அவர்கள் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் மொத்த திரையரங்கையும் தன் பக்கம் இழுக்கிற ஆளுமையோடு தன் நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
Youtube பிரபலங்கள் திரையில் தோன்றும் போது திரையரங்கம் அதிர்ந்து அதிர்ந்து அடங்குகிறது.
இன்றைய ரசிகர்கள் திரையைத் தாண்டி யூடியூபிலும் வாழ்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.
இயக்குநர் தயாரிப்பாளர் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு வசந்த பாலன் பதிவிட்டு இருக்கிறார்.