மக்கள் வழங்கிய ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் அநுர அரசு செயற்படுகின்றது, எதிர்வரும் தேர்தலில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
எம்.பி. தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று வழக்கு
விசாரணைக்காகச் சென்றதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருடர்களைப் பிடிப்பதற்கும், ஊழல் – மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் நாங்கள்
எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஊழல் எதிர்ப்புக்கு நாங்கள் முழுமையான
ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஊழல் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை
அச்சுறுத்துவதாயின் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே நாங்கள்
ஒன்றிணைந்துள்ளோம்.
நீதிமன்றம் சுயாதீமான முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை
எமக்கு உண்டு.
ஊழல்வாதிகளைப் பிடிப்பதாக இந்த அரசு தேர்தல் பரப்புரை மேடைகளில்
குறிப்பிட்டது. பல பில்லியன் ரூபா மோசடி செய்தவர்கள் உள்ளார்கள். அந்த
வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை முடக்குவதாகக்
குறிப்பிட்டார்கள், உகண்டாவில் இருந்து நிதியைக் கொண்டு வருவதாகக்
குறிப்பிட்டார்கள். ஆனால், இன்று அவற்றை மறந்து விட்டு பிரதான எதிர்க்கட்சியை
முடக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள்.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயற்பாடு
நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகளை
அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசு பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு
மேற்கொள்கின்றது. அரசின் முறைகேடான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் போது அந்த
முறைகேடுகள் குறித்து ஆராயாமல் முறைப்பாடுகளை முன்வைக்கும் தரப்பினர் இன்று
இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.
உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை ஸ்தாபிக்கும் போது கட்சியின் கொள்கை மற்றும்
தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக்
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய
மக்கள் சக்திக்கு எமது கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாக ஒருபோதும்
தீர்மானிக்கவில்லை.
எதிர்வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள
சந்தர்ப்பத்தில் நாங்கள் எவ்வாறு தேசிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு
வழங்குவோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளை
முடக்குவதற்கு அரசு தீவிர அவதானம் செலுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.