இலங்கையில் நாட்டின் கலாசாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்க
வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு USAID நிறுவனம் 7.9 மில்லியன் அமெரிக்க
டொலர்களை செலவிட்டுள்ளதாக, இலங்கை நாடாளுமன்றின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவன்ச, குற்றம் சுமத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் கூற்றுப்படி, இலங்கை திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன்
அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது, இது, 2400 மில்லியன் ரூபாய்களுக்கும்
அதிகமானதாகும் என்று அவர் ஒரு ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
குறிப்பாக இளைஞர்களிடையே பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள்
தொகையைக் குறைக்கவும் திட்டங்களை USAID வடிவமைத்ததாக வீரவன்ச குற்றம்
சுமத்தியுள்ளார்.
வீரவன்ச வலியுறுத்தல்
உலகம் அதிக மக்கள் தொகை கொண்டது என்றும், எனவே நோய்களை உருவாக்குவதன் மூலம்
கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பில் கேட்ஸ் ஒருமுறை கூறினார். நோய்களைக்
குணப்படுத்த, தடுப்பூசிகள் தேவை என்ற வகையில் அந்த செயல் வணிகங்களையும்
மேம்படுத்துவதற்கான ஒரு சதி என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க நிறுவனத்தின் நிதி, இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பாலின வேறுபாடுகளைக்
காட்டும் மொழியைக் கற்பிக்க செலவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், எந்த ஊடக நிறுவனங்கள், குறித்த நடவடிக்கைகளுக்கு எவ்வளவு
நிதியைப் பெற்றன என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும்
தாம் வலியுறுத்துவதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டின் மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் தலைவர்களுக்கும்,
இலங்கையின் கலாசாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம்
நிதியளிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அவர்களின்
பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.