இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது.
இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.
பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பிள்ளைகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/the-grade-5-scholarship-exam-is-today-1786243183

