அரச முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இன்று (14) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இந்த பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டில் தற்போது பல்வேறு பொருளாதார சவால்கள் காணப்பட்டாலும், புதிய அரச உத்தியோகத்தர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வது தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சாதகமான நடவடிக்கை என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அரச சேவையில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மனித வளம் போதுமான அளவில் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை கருத்திற்கொண்டு, திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் 40 புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சி நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) என். மணிவண்ணன் வளவாளராக கலந்துகொண்டு தமிழ் மொழிமூல விரிவுரையை வழங்கினார்.
மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ். குருகுலசூரிய, புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

