தேயிலைச் செடிகளுக்குள் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் உள்ள தேயிலை செடிக்குள்ளேயே குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த 43 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வழமைபோன்று தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், குறித்த பகுதியில் சடலம் இருப்பதை அவதானித்து தோட்ட அதிகாரிகளுக்கும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கினர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மஸ்கெலியா பொலிஸார் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஹட்டன் நீதிமன்ற நீதவான் சடலத்தைப் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து ஹட்டன் தடயவியல் பொலிசார் தடயங்களை சேகரித்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

