குளவி கொட்டுக்கு இலக்காகி ஒன்பது மாணவர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
149 மாணவர்கள் படிக்கும், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தி.மு,ஜயரத்திர ஆரம்ப வித்தியாலயத்திலே இவ்வாறு மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த ஆரம்ப பாடசாலையில் மதிய இடைவேளையின் போது குளவி கொட்டுதல் ஏற்பட்டுள்ளதுடன் உடனடியாக பாடசாலையை மூடுவதற்கும் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காரணம்
மலைப்பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் குளிர் காலநிலையால், இந்த குளவிகள் கலைந்து, பாடசாலை மாணவர்கள், தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்களை தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மாத்திரம் கம்பளையைச் சுற்றியுள்ள மூன்று பாடசாலைகளில் குளவி கொட்டியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார், சுமார் 80 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
கம்பளை, உலப்பனை மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டியதைத் தொடர்ந்து அறுபது மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும், இந்த மாதத்தில் மட்டும் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே உரிய அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி, இந்த துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.