வவுனியா (Vavuniya), ஓமந்தை (Omanthai) காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் தவறானமுறைக்குட்படுத்தப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (14.09) கைது செய்யப்பட்டுள்ளதாக
ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, ஓமந்தை காவல் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட காவல் பரிசோதகருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
சிறுமியின் வாக்கு மூலம்
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட காவல்துறையினர் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி தவறானமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை தவறானமுறைக்கு உட்படுத்தப்படுத்தியமை தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை தவறானமுறைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
தந்தை கைது
இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தை காவல்துறையினர்தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஸ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

