உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக
பிரிவுக்குட்பட்ட, 18 பேர் இன்று(22) கிண்ணியா தள வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6
ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவேறு ஹோட்டல்களில் உணவருந்தியவர்கள்
இவர்கள் நேற்றிரவு (21) கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள,இரு
ஹோட்டல்களில் பராட்டா, சுட்ட கோழி (BBQ), மயோனிஸ் ஆகிய உணவை சாப்பிட்டவர்கள் என
தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம்.
அஜித் கருத்து தெரிவிக்கையில்,
இவர்கள் இன்று (22) காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரையும் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம் மற்றும் வாந்தி காரணமாக, ஒரு மாணவன்
பாடசாலையில் இருந்து கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
கடுமையான வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி
இவர்களுக்கு கடுமையான வயிற்று வலியோடு, தொடர்ச்சியான வாந்தியும்
வயிற்றோற்றட்டமும் ஏற்பட்டிருப்பதோடு, தலைசுற்றும் சிலருக்கு
ஏற்பட்டிருக்கின்றது. சிறுவர்கள் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்
என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சம்பவம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு, இரு ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதோடு, மேலும்
விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மூன்று ஹோட்டல்களில் உணவு மாதிரி பெறப்பட்டு, பாக்டீரியா பரிசோதனைக்காக
கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், சகல ஹோட்டல்களிலும்
கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.







