இலங்கைக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியும், தவறான உற்பத்தி திகதிகளுடன் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage) குறிப்பிட்டுள்ளார்.
பழைய வாகனங்கள்
தற்போது பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கப்பலில் ஏற்றும் திகதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுங்கத்தினால் குறித்த வாகனங்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரசாத் மானகே குறிப்பிட்டார்.
சுங்கத்தினால் விசாரணை
இதேவேளை இந்த வாகனங்கள் தொடர்பில் பொய்யான பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை தொடர்பிலும் சுங்கத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் எந்தவொரு வாகனமும் மீள ஏற்றுமதி செய்யப்படமாட்டாது எனவும் பிரசாத் மானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.