மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 29ஆவது ஆண்டு
நினைவுதினம் இன்று (11.02.2025) நினைவுகூரப்படவுள்ளது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 29
ஆண்டுகளுக்கு பின்னரும் நீதி கிடைக்காமல் நீதி கோரி வரும் நிலையில் இன்றைய
தினம் (10.02.2025) குறித்த படுகொலையின் 29ஆவது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கின்றார்கள்.
அத்துமீறி நுழைந்த ஆயுததாரி
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி
நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச்
சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொடூர சம்பவம் 1996.02.11ஆம்
திகதி மாலை இடம்பெற்றிருந்தது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில்
நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8
இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக
குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை
பின்னர் குறித்த வழக்கு
திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின்
வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி
குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல்
நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம்
ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும்
(பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல்
நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில்
இருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- சுப்பையா சேதுராசா
- அழகுதுரை பரமேஸ்வரி
- அருமைத்துரை வள்ளிப்பிள்ளை
- கிட்ணன் கோவிந்தன்
- அருணாசலம் தங்கவேல்
- செல்லத்துரை பாக்கியராசா
- வடிவேல் நடராசா
- இராஜேந்திரம் கருணாகரம்
- சண்முகநாதன் நிதாந்தன்
- இராமஜெயம் கமலேஸ்வரன்
- கந்தப்போடி கமலாதேவி
- சிவக்கொழுந்து சின்னத்துரை
- சிவபாக்கியம் நிசாந்தன்
- பாக்கியராசா வசந்தினி
- அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி
- தங்கவேல் கலாதேவி
- ஸ் ரீபன் பத்துமா
- சுந்தரலிங்கம் பிரபாகரன்
- சுந்தரலிங்கம் சுபாஜினி
- கனகராசா சுவாதிராசா
- சுப்பிரமணியம் பாக்கியம்
- விநாயகமூர்த்தி சுதாகரன்
- ஆனந்தன் அன்னம்மா
- விஜயகாந் லெட்சுமி
- அருமைத்துரை
- தனலெட்சுமி ஆகியோர் உட்பட 26பேர் கொல்லப்பட்டிருந்தனர்.