நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (7) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கொழும்பு பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 35 வயதுடைய இருவரும், மாவதகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் மற்றும் ரக்வானா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்கள் எடுத்துச் சென்ற பயணப்பொதிகளை சோதனை செய்த போது 8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான 560,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 2,800 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.