‘டித்வா’ புயல் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் அரச வேலை நாட்களில் தமக்குரிய தபால் நிலையங்கள் அல்லது உப தபால் நிலையங்கள் ஊடாகத் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய ஓய்வூதிய நன்மை
பொதுவாக விவசாய ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வழங்கப்படும்.

எனினும், அனர்த்த நிலைமை காரணமாகத் தபால் நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் சேதமடைந்துள்ளதால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற் கொண்டு, இம்முறை அந்தக் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 178,753 விவசாயிகள் விவசாய ஓய்வூதிய நன்மைகளைப் பெறுவதுடன், 6,312 மீனவர்கள் மீனவர் ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்.
டிசம்பர் மாத ஓய்வூதியக் கொடுப்பனவிற்காக 413 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

