கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜைகள் ஐந்து பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சைபர் மோசடியில் ஈடுபட நாட்டிற்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 5 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-405 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
சீன பிரஜைகள்
கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நோக்கில் இலங்கை வந்துள்ளதாக சீன பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரியிடம் அவர்கள் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன்போது அவர்களிடம் மேற்கொண்ட விசாணையின் போது அதனை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களை முன்வைக்க தவறியுள்ளனர்.
நாடு கடத்தல்
சந்தேக நபர்கள் கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள சந்தேகத்திற்கிடமான நிறுவனங்களுக்காகவும் பணியாற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.
சைபர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களை விமான நிலையத்திலிருந்து நாடு கடத்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.