கொழும்பு, கொம்பனிவீதியில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவ, மாணவியின் கையடக்க தொலைபேசியில் பொருத்தப்பட்டுள்ள சிம் அட்டைகள் தொடர்பான அழைப்பு தரவு பதிவுகளை கொம்பனிவீதி பொலிஸாரிடம் வழங்குமாறு கோட்டை நீதவான் சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க உயிரிழந்த மாணவ மற்றும் மாணவியின் கையடக்கத் தொலைபேசி தரவு பதிவேடுகளை பெற்றுக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கி கோட்டை நீதவான் கோசல சேனாதீர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த மாணவனும் மாணவியும் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் அந்த நண்பர் பாகிஸ்தானியர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை
பாகிஸ்தானை சேர்ந்த மாணவனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற நிலையில், மாணவனின் தந்தை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி என்பதனால் விசாரணைக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே உரிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.