மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு குளப்
பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (4) மேற்குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 28 கிலோ எடை கொண்ட 13 கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் இதன்
சந்தை பெறுமதி 42 இலட்சம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.