2008 மற்றும் 2024க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து பெற்றதாகக்
கூறப்படும் நிதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், நிதி மற்றும்
வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான 22 கோப்புகள், தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு
தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இருபத்தி இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல்வேறு தொகைகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான
தொகை பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காசோலைகளின் விபரங்கள்
எனினும், பணத்தைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட
காசோலைகளின் விபரங்களை அணுக, பொலிஸ் அதிகாரிகள், இன்று கோட்டை நீதவான்
நீதிமன்றத்திடம் ஒப்புதல் கோரினர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன், முன்னாள்
அமைச்சர் ராஜித சேனாரத்ன 10 மில்லியன், மறைந்த பிரதமர் டி.எம். ஜெயரத்ன 30
மில்லியன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா 18
மில்லியன் ரூபாய்களை பெற்றதாக, நாடாளுமன்றில், தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தவிர, வாசுதேவ நாணயக்கார, விதுர விக்கிரமநாயக்க, விமல திஸாநாயக்க, சுமேத
ஜயசேன, எஸ்.பி. நாவின்ன, ஜோன் அமரதுங்க, சரத் அமுங்கம, பி.ஹரிசன், பியசேன
கமகே, மனோஜ் சிறிசேன, பி.தயாரதன, மற்றும் எஸ்.சி.முத்துக்குமாரண ஆகியோரும்
நிதிகளை பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.