நிதி பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாடு
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில் பிரதி அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புகைப்படங்களில் காணப்படும் பிறந்த நாள் கொண்டாட்டம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரிஉல்ல பகுதியில் நடைபெற்றது.
தனது மகள் களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருப்பதாகவும், அவர் தனியார் துறையில் வேலை செய்வதாகவும் நிதி பிரதி அமைச்சர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
போலியான செய்தி
இந்த போலியான செய்தி மூலம், முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தனது அரசியல் இயக்கத்திற்கும் கடுமையான அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பொய்யான செய்தி மூலம் வேண்டுமென்றே அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த தவறான செய்தி தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, அதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தனது முறைப்பாடு ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.