இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், சில தகவல்களை வெளியிட, இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால்,
அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும்,
அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
விரிவான கலந்துரையாடல்
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ், சீனக் கப்பல்கள்
இலங்கை கடல் பகுதியில் அனுமதிக்கப்படாது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதா என்ற
கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை அவசரமாக
யாராவது கேட்டால், அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து
தகவல்களைப் பெறலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதேநேரம், சட்டமா அதிபரின் ஒப்புதலுடனும், தொடர்புடைய அமைச்சகங்களுடன் விரிவான
கலந்துரையாடலுக்குப் பிறகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக
அமைச்சர் தெரிவித்துள்ளார்.

