இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஹோட்டல் துறை தொடர்பான வேலைகளுக்கு இலங்கை இளைஞர்கள் குழு ஒன்று முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹோட்டல் வீட்டு பராமரிப்பு வேலைகளுக்குச் சென்ற முதல் குழுவில் இளம் பெண்கள் உட்பட 103 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த குழுவினர் நேற்று (07) இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
200 பேர் கொண்ட குழு
மேலும், ஹோட்டல் ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்காக 905 இளைஞர்கள் இஸ்ரேலிய FIBA அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 855 பேர் லாட்டரி முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பணியகம் கூறுகிறது.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இரண்டாவது லாட்டரி சீட்டிழுப்பிற்காக மேலும் 200 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

