வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம் இன்றி வரக்கூடிய சூழலை அநுர அரசு
உருவாக்கவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்
சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் கொழும்பு ஷங்க்ர்ல ஹாேட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிவிவகார
அமைச்சர் விஜித ஹேரத் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி அச்சம் இன்றி
நாட்டுக்குள் வந்து முதலீடு செய்யலாம் எந்த தடையும் இல்லை எல்லோரும்
வாருங்கள் என அறை கூவல் ஒன்றை விடுத்தார்.
இந்த அறிவிப்பு அநுர அரசு மாத்திரமல்ல யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர்
ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் கோட்டாபய
ராஜபக்ச அரசுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி விஐித ஹேரத் போன்று
அறைகூவலை முன் வைத்தனர்.
தேசிய இனப்பிரச்சினை
ஆனால் பெரியளவிற்கு முதலீட்டாளர்களின் கவனத்தை
ஈர்க்கவில்லை. காரணம் இலங்கைத் தீவின் அரசியல் அமைதியின்மையும் உள் நாட்டில்
தீர்க்கப்படாது உள்ள தேசிய இனப்பிரச்சினையும் முதன்மையான விடயங்களாகும்.

உள் நாட்டு அரசியலின் அமைதியற்ற சூழலை ஒவ்வொரு வெளிநாட்டு முதலீட்டாளர்களும்
தங்களது முதலீட்டிற்கு பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்வதுடன் நாட்டில் நிலையான
பொருளாதார கொள்கைகள் வலுவாக்கப்படாமை மற்றும் சக இனங்கள் இடையே உள்ள முறுகல்
நிலைமைகளை கண்டு முதலீடு செய்ய அச்சப்பட வைக்கின்றது.
கடந்த கால அரசுகள் போன்று அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வுகளை காணாது வெறுமனே
அறைகூவல்களை தொடர்ச்சியாக கூவிக் கொண்டுதான் அநுர அரசாங்கமும் இருக்குமாயின்
எந்த மாற்றமும் பொருளாதாரத்தில் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இப்படியான
அறிவிப்புக்கள் நாட்டு மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம்
தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தான் நாட்டின் பொருளாதார முதலீடாக
அமையும் என்ற உண்மையை அநுர அரசு உணர்ந்து செயல் வடிவம் கொடுக்கும் போதே
நாட்டில் பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்ல இன நல்லிணக்கத்தையும் பூரண
சுதந்திரத்தையும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்ய முடியும்.

இதுவே
அச்சமின்றி முதலீட்டாளர்கள் வருவதற்கான சூழலை உருவாக்கும். அத்துடன் மாதாந்தம்
மில்லியன் கணக்கான உல்லாசப் பயனிகள் வந்து குவிவதற்கான வாய்ப்புக்களும்
உருவாகும்.
ஆகவே அர்த்தமற்ற அறைகூவலை விட்டு அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வுகளை காண
செயற்பாட்டில் இறங்குங்கள் என தெரிவித்தார்.

