யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் ஒருவர் மீது
தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் இரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால்
வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு
குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் விடுதலை ..
குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர் மீது
அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த
வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார், இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர்
தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்த இருவரையும் விடுவிக்குமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கூறியமைக்கு அமைவாக பிணை எதுவுமின்றி
அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்
பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் விடுவித்தமையானது குறித்த
கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையே தொடர்பு உள்ளதா என்ற கேள்வி மக்கள்
மத்தியில் எழுகின்றது.

