மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி மற்றும்
திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில்
ஈடுபட்டவர்கள் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார் பிரபல போதைப்பொருள் வியாபாரி
ஒருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் 24 போத்தல்
கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து மட்டு.தலைமையக பொலிஸ் நிலைய ஊழல்
மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத்
பெர்ணான்டோ தலைமையிலான பொலிசார் சம்பவ தினத்தில் கருவப்பங்கேணி பகுதியிலுள்ள போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல
போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது 34 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்த போது அங்கு பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து கைது
செய்தவரை கொண்டு செல்ல விடாது பொலிசாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை திருப்பெருந்துறையை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை
முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56
வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை பொலிஸ் தடுப்புக் காவலில்
வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில்
ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

