ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(16.12.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த
இரண்டு இளைஞர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த விடுதியை நேற்று இரவு பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21, மற்றும் 25
வயதுடைய இரு வியாபாரிகளை கைது செய்ததுடன் ஒருவரிடம் ஒரு கிராம் 800 மில்லி
கிராம், மற்றவரிடம் ஒரு கிராம் 500 மில்லிகிராம் ஜஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்ட கொக்குவில் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதான
வியாபாரி கடந்த மாதம் 29 ஆம் திகதியில் இருந்து தங்கு விடுதியில் ஒரு நாளைக்கு
2 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி தங்கி வந்துள்ள நிலையில் அதே பிரதேசத்தைச்
சேர்ந்த வியாபார நண்பன் கடந்த 5ஆம் திகதி அந்த விடுதிக்கு சென்று பிரதான
வியாபாரியுடன் தங்கியிருந்து போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

