கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் பொலிஸ் அதிகாரி என நாடகமாடி வீதியில் செல்லும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி என தன்னைக்காட்டிக் கொண்ட நபர், வீதியில் செல்லும் இளம் பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி வலுக்கட்டாயமாக பாழடைந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அதிரடியாக கைது
இது தொடர்பான குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கல்கிஸ்ஸ பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும், இதுபோன்ற துஷ்பிரயோகங்களைச் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபோன்ற துஷ்பிரயோகச் செயல்கள் தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, அந்த வீதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததது.
பெண்களுக்கு எச்சரிக்கை
மேலும், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ரஷினி ராஜபக்ஷவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் அத்திடிய பகுதியில் காருடன் கைது செய்யப்பட்டார்.

அதற்கமைய, இதுவரை பல பெண்கள் இந்த போலி அதிகாரியால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அடையாளம் தெரியாத சந்தேக நபர்கள் அல்லது அடையாளம் வெளியிடப்படாத நபர்களின் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

