இலங்கை வளர்ச்சியடைந்த நாடுகள் கடைபிடிக்கும் சுகாதார தரத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்தியக் குழுவின் 78வது அமர்வு இன்று 13.10.2025 ஆரம்பிக்கப்பட்டு 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக்குழுவின் 78வது அமர்வை இம்முறை இலங்கை நடத்துகினறது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மற்றும் WHO தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பொறுப்பாளர் டாக்டர் கேத்தரினா போஹ்மே ஆகியோருடன் எட்டு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் இரண்டு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் பிற WHO நிபுணர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை அபிவிருத்தி
இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதோடு இடைநிலை வருமானம் பெறும் என்ற வகுதியில் இருந்தாலும் சுகாதாரத்துறையில் முன்னேற்றமடைந்துள்ளது.
நான் ஏழு வருடங்களுக்கு முன் அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார தின நிகழ்வில் கலந்து கொண்டேன்.
சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இலங்கை பொது சுகாதாரத்துறையில் பல வெற்றிகளை பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் பெரும் மாற்றம் இடம்பெற்றுள்ளது. பிறந்த நாள் முதல் ஒரு பிரஜைக்கு வழங்கப்படும் இலவச சுகாதார சேவை 1952 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இது குறுகிய காலத்தில் செயற்படுத்தப்பட்டதாகும்.
புகையிலையை கட்டுப்படுத்தல் தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முனைந்த முதல் ஆசிய நாடாக இலங்கை கருதப்படுகின்றது என்றார்.
Source: https://tamilwin.com/article/78th-session-of-who-regional-committee-in-colombo-1760342574

