இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளும் கடற்றொழில் மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளையும் தடுத்து நிறுத்த
நீரியல்வளத் திணைக்களம், ஜனாதிபதி ஆகியோர் உடன்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கும்
ஆதரவு தருமாறும், கடற்றொழிலாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறும் வடமராட்சி வடக்கு
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வலியுறுத்தியுள்ளது.
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர்
தம்பிராசா சந்திரதாஸ் இன்று(11) நண்பகல் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில்
நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்
கடந்த ஒரு மாதகாலமாக இந்திய கடற்றொழிலாளர்களது இழுவைப் படகுகள் எல்லை தாண்டி
வடமராட்சி கிழக்குத் தொடக்கம் மன்னார் வரை சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர்.

அத்துடன் உள்நாட்டிலும் இழுவைப் படகை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளும் தொடர்சியாக
இடம்பெற்று வருகிறது.
மேற்குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி நாளை
யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி
பேரணியாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து மாவட்டச் செயலக செயற்பாடுகளை
முடக்கப் போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் சம்மேளனம் நேற்று முன்தினம்
அறிவித்திருந்தது.
குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி வடக்கு
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தம்பிராசா சந்திரதாஸ்
குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

