வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட்ட போராட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த போராட்டம் இன்றையதினம் (01.10.2024) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அந்த இடத்துக்கு ஜனாதிபதியின் ஆதரவாளர் என கூறிகொண்டு வந்த நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
குழப்பநிலை
அவர் அங்கிருந்த தாய்மாரை உங்களுக்கு பணம் வருகின்றது, உங்களை பொலிஸில் பிடித்துகொடுப்பேன், பொலிஸும் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங்களை கைது செய்வார்கள் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து காணாமல் போனோரின் உறவுகளும் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தின் பின்னர் அச்சுறுத்திய நபர் குறித்த இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளார்.