இலங்கையின் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் குறித்த தரச் சுட்டியின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கை முழுவதும் காற்றுத் தரம் தற்போது ‘சற்றே ஆரோக்கியமற்ற’ நிலையில் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம், கதிறுவெல, சிலாபம், அகாரகம, வண்டுரகல, திகண, மாதம்பாகம, ஹுங்கம, அக்கரைப்பற்று, கலவான, முள்ளியவளை, பன்னன்கண்டி, அடம்பன், உப்புவெளி உள்ளிட்ட பல பகுதிகளிலும், காற்றுத் தரம் சற்றே ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் மாசு மூலங்கள் மற்றும் மாசுபாட்டை பரவ விடாமல் தடுக்கும் தற்போதைய வானிலை நிலவரம் ஆகியவை இணைந்து காற்றுத் தரக் குறைவுக்கு முக்கிய காரணமாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த காற்றுத் தரக் குறைவு, குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என குறித்த அதிகாரி எச்சரித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், வெளிப்புற செயல்பாடுகளை குறைத்தல், சுவாச நோயாளிகள் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

