கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (AL EXAM) (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations – Sri Lanka) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை, பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
இதேவேளை, 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
குறித்த அறிவித்தலின்படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.