நீர்கொழும்பு பகுதியில் கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஒருவரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று (21) நீர்கொழும்பு காவல் பிரிவின் காமச்சோடை பொல பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையின் உரிமையாளர் மீது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மிரிஸ் அந்தோணி என்பவரின் மூத்த மகனை குறிவைத்து தாக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தின் போது துப்பாக்கி செயலிழந்ததால், அவர்கள் குறித்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின், கீழுள்ள கமாண்டோ சலிந்த என்ற நபர், குறித்த வர்த்தக நிலையத்தில் கப்பம் கோரி பணம் கேட்டதாகவும் பணம் செலுத்தப்படாத நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.