வட மாகாணத்தில் போதைப்பொருள்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும்,
பொலிஸாரும் ஈடுபடவில்லை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருண ஜயசேகர
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு –
செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டு
அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும்
ஈடுபடுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
குறிப்பிடுகின்றார். அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர்,
பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விவரங்களை அவர்
வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம்.

இவர்
குறிப்பிடுவதைப் போன்று பாதுகாப்புத் தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன்
தொடர்புபடவில்லை.
கடந்த காலங்களில் அரசுகள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள்
பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற
வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது.
தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில்
செயற்படுத்தி வருகின்றது.
பாரதூரமான மோசடி
எதிர்க்கட்சியினர்தான் கலக்கமடைந்து போலியான
குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த கால அரசுகள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி,
வெள்ளைப்பூடு உட்பட பாரதூரமான மோசடிகளால்தான் பிரபல்யமடைந்தன.
பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு –
செலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம்.

நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான
முறையில் பேணப்படுகின்றது. கடந்த காலங்களைப் போன்று முறையற்ற வகையில் வரவு –
செலவுத் திட்டத்தைத் தயாரிக்கவில்லை. மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும்
வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான் இந்த வரவு –
செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

