நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு பயனுள்ள நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய நிவாரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் சுற்றறிக்கை
இந்த சுற்றறிக்கைக்கு அமைய வருமானம் அல்லது வர்த்தகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எழுத்து மூலமான, பாதிப்புகள் குறித்த விபரங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதியளவில் வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட கடன் வாங்குபவர்களின் மூலதனம் மற்றும் அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடன் வசதி வாய்ப்புக்களுக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு 3 முதல் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
இது தவிர, வட்டி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியினில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏற்கனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வட்டி விகிதத்தை விட அதிக வட்டியினை வசூலிக்க கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு கடன் மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய, கடன் பெறுபவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

