தனது கல்வித் தகைமைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல (Asoka Sapumal Ranwala) நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாடாளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் கூறியுள்ளார்.
பதவி விலகல்
மேலும் சான்றிதழ்களை வழங்க நாடாளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை இழிவான தந்திரோபாயங்கள். நாங்கள் நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் பற்றி அசோக சபுமல் ரன்வல பேசுகையில், அரசியல் என்பது ஒருபோதும் பதவிகளைப் பெறுவது பற்றியது அல்ல.
எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வரும் எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் அதன் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம். அதுதான் எங்கள் அரசியல்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பொதுமக்களிடையே சந்தேகங்கள் எழுவதைத் தடுக்கவே தான் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.